Sunday 20 October 2013

சுவேதா 2 (என்னுள் ஆணின் அகிம்சை.. பெண்ணின் இம்சை)

ஓ நாம் ஆணாகப்பிறக்கப்போகிறோமோ….இந்த உலகத்தில் என்று சந்தோஷமாக உணர்ந்தேன் என் உள்ளுறுப்புக்கண்டு ஆச்சரியமும் கொண்டேன்.

என்னுடைய கடவுளுக்கு அப்போதே நான் நன்றி சொல்லிக்கொண்டேன்.என் ஆண்மைப்பிறப்பின் சந்தோஷத்தை வெளிவந்து அனுபவிக்க,காலம் இன்னும் ஆகும் என்பதால்  சிறிதுகாலம் அந்த இருட்டறையில் உருண்டைக்குள் ஆதரவாக கை.,கால்களை ஆட்டிக்கொண்டு,,என் வாயினுள் கை வைத்துக்கொண்டு,நகங்களால் நான் தங்கியிருந்த உள் பாகத்தில் தடவிக்கொண்டும்,உள்ளே பொழுதுபோகாமல் விளையாடிக்கொண்டு இருந்தேன். ஆனால் இங்கே என் அம்மாவோ என்னுடைய சேட்டைகளை ரசிக்கக்கூட முடியாமல் சோகத்தில் ஆழ்ந்து இருந்தாள் என்பது எனக்கு அப்போது தெரியாது.

தெரிந்து இருந்தால் கர்ப்பத்தில் நானே கரைந்திருப்பேனே…என்று சிந்து பைரவி யில் வரும் பாட்டு மாதிரி கலைந்து போய் இருப்பேன். ஆனால் எனக்கு அப்போது உள்ளுக்குள் நடக்கும் விசயம் தெரிய வந்ததே தவிர,என் அம்மாவின் சோதனை காலம் என்பது நான் உள்ளிருந்தகாலம் தான் என்பதை அப்போது உணரவும் இல்லை.உணரவேண்டிய வயதும் எனக்கு இல்லை.

என் அம்மாவின் வலி நிறைந்த நாட்களாய் ஆகிப்போனது என் உயிர் உள்ளுக்குள் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் காலம்.
எனக்கு அப்போது தெரியாது.என் அம்மாவும்,அப்பாவும் ஒருவருக்கொருவர் உறவினர் என்பது, என் பாட்டியின் நாத்தனார் பையன் தான் என் அப்பா,அதனால் உறவு விட்டுப்போகக்கூடாது என்பதற்காக என் அம்மாவை என் பாட்டி கட்டிவைத்துள்ளார்.ஆரம்பத்தில் இருந்தே குடிக்கு அடிமையாகிப்போன என் அப்பாவிற்கு என் அம்மாவை சரிவர பார்த்துக்கொள்ள முடியவில்லை.

இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டைகள்தான் நடந்து கொண்டு இருந்திருக்கின்றன. இந்த சண்டைக்கு நடுவில் என் அப்பா அம்மா இருவருக்கும் இருந்த அன்பிலும்,ஆசையிலும்,காமத்திலும் நானும் எனக்கு முன்பாக என் அக்காவும் கருப்பைக்குள் வாழ வேண்டியதாகிவிட்டது. என் அக்கா எனக்கு முன்பாக இவ்வுலகத்தைக் காண வெளியேறிவிட்டாள். அடுத்துதான் நான் உருவாக்கப்பட்டு கருப்பைக்குள் வளர்ந்து கொண்டு இருக்கிறேன்.

பம்பாயில் தான் என் அம்மாவும்,அப்பாவும் வாழ்ந்து கொண்டு இருந்திருக்கிறார்கள். என்னை வயிற்றில் சுமந்துகொண்டிருந்த என் அம்மாவிற்கு பசியும் வேதனையும் தான் மிஞ்சியிருக்கிறது. அதனால் என் அம்மா ,அப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல் ரயில் ஏறி எங்க அக்காவை கையிலும் என்னை வயிற்றிலும் சுமந்துகொண்டு ரயிலில் சாப்பிடக்கூட காசு இல்லாமல் பட்டினியாக சேத்துப்பட்டில் உள்ள என் பாட்டி வீட்டிற்கு வந்து தஞ்சம் அடைந்தார்.

என் பாட்டி ஆயிரம் சமாதானப்படுத்திப்பார்த்தும் என் அம்மாவிற்கு என் அப்பாவின் மீது இருந்த கோபம் குறையவே இல்லை. நாளடைவில் என் பாட்டியும் அறிவுரை செய்வதையும், மருமகனுடன் சென்று வாழ் என்று சொல்வதையும் கைவிட்டாள்.

நான் பிறக்கும் நாள் வந்தது. எனக்கு உள்ளுக்குள் சந்தோஷம் என் அம்மாவை சந்திக்கப்போகிறேன். வெளி உலகத்தை காணப்போகிறேன்..இந்த நாளுக்காக எத்தனை நாள் ஒரு உருண்டைக்குள் என் வாழ்க்கையை அடைத்துக்கொண்டு இருந்தேன்.அப்பாடா,விடிவு காலம் வந்தது.

இப்போது என் தலை சுற்றி என் அம்மாவிடமிருந்து இருந்து மெல்ல மெல்ல  வெளியேறுகிறேன். மூச்சு முட்டுகிறது.
நானும் என் சுவாசத்தை இழுத்து விட்டுக்கொண்டு வெளியில் வந்து கொண்டு இருக்கிறேன். வெளி வரும் வழியில் வலி தாங்காமல் என் அம்மா கத்தும் சத்தம் என்னை பயப்பட வைத்தது. அந்த சத்தத்தில் நானும் பயந்து போய் கத்த ஆரம்பித்தேன்.

ஒரு வழியாக அம்மாவிடமிருந்து வெளிவந்து விழுந்துவிட்டேன். ஒரு ஆதரவுக்கை என்னை தாங்கிப்பிடித்தது.தலைகீழாக தொங்கவிட்டது.
எனக்கு இத்தனை நாளாக என் அம்மாவின் தொப்புள் கொடி மூலம் வந்த உணவு வழியை வெட்டி எடுத்தனர். வலியில் நானும் என் அம்மாவும் ஒரு சேர கத்த ஆரம்பித்தோம்.

என் அம்மாவிடம் உனக்கு சிங்கக்குட்டி மாதிரி ஒரு ஆண் குழந்தை பிறந்து இருக்கு என்று என் முகத்தை என் அம்மாவிடம் காண்பித்தார்,  பொம்மை போன்ற உருவத்தில் அங்கிருந்த செவிலி.

நானும் என் அம்மாவின் முகத்தை காண கண் முழித்துப்பார்த்தேன்.அம்மாவின் உருவம் தெரிந்தது.அம்மாவின் முகத்தை கண்டு சந்தோஷத்திலும்,பசியினாலும் மேலும் அழுதுகொண்டே இருந்தேன்.

அய்யா நாம் நம் அம்மாவை கண்கலங்க வைத்துவிட்டு வந்துகொண்டு இருக்கிறோமா…?என்ற பாரத்துடன் வெளியில் வந்து விட்டேன்.
‘’ஏய் இங்கபாருடி…உனக்கு ஒரு ஆம்பிள்ள குட்டில பிறந்து இருக்கான்.கண்ண முழிச்சு பாரும்மா…’’என்று என் அம்மாவின் கன்னத்தில் என் பாட்டி கைகளால் தட்டி என்னைக் காண்பித்துக்கொண்டு இருந்தாள்.
என் அம்மா என்னைப்பார்த்தார். அழுதுகொண்டே…,என் நெற்றியில் தன் உதடுகளால் ஈரத்தை பதித்தார். எனக்கும் என் அம்மாவிற்கும் ஆன உறவு அன்றிலிருந்து வெளியுலகத்திற்கு வந்துவிட்டது.

இனி என் வாழ்க்கை வெளியுலக வாழ்க்கையை மையப்படுத்திபோகும்…இதில் இடஞ்சல்,சங்கடங்கள்,சந்தோஷத்தருணங்கள், கேள்விகள், பதில்கள் எல்லாம் நிறைந்ததாகவே இருக்கும்.
ஆனால் நான் நிறைந்தவனாக வாழ்ந்தேனா…..கேள்விகள் அடங்கிய கோப்பைகள்…அதில் ஒவ்வொரு சொட்டுத்தண்ணீராக விடுகிறேன். தாகம் தீர்க்க போதுமானதாக இல்லையெனினும்..உசுரு பொழைக்க இந்த நீர் உதவக் கூடும்.அதனால் எல்லாரும் ஒரு சொட்டு நீரை தொட்டு பருகிக்கொள்ளுங்கள்.


வளரும் சுவேதா… 

Wednesday 9 October 2013

இன்றைய டிரண்ட் என்ன தெரியுமா…?



பழங்காலத்தில் இருந்த பெண்கள் எல்லாம் வீரத்தில் சிறந்தவர்களாக இருந்தார்கள்.ஒரு போருக்கே தலைமை ஏற்கும் பொறுப்புகளை பல பெண்கள்(அரசிகள்) ஏற்றார்கள்.

இடைப்பட்ட காலத்தில் பெண் அடிமையானாள்..,கீழ்த்தரமாக நடத்தப்பட்டாள்.கணவன் இறந்துவிட்டால்.அவளையும் கணவனின் சிதையில் தூக்கிப்போட்டு கொன்றுவிடும் அளவிற்கு பெண்களின் நிலை மோசமடைந்தது.

பின்னர் பெரியார், அண்ணா,இன்னும் பல தலைவர்கள் போராடி மீட்டு வந்தனர் மீண்டும் பெண் சுதந்திரத்தை..
காலங்கள் ஓட ஓட…..பெண்கள் அதிக அளவில் வளர்ச்சியடைத்தனர்.ஆணுக்குப் பெண் சளைத்தவள் இல்லை என்ற அளவிற்கு பேசி ஜெயித்தும் காட்டினர்.

சமீபகாலமாக பெண்கள் பற்றி கேள்விப்படும்….உண்மை (?) பற்றி அறிந்தபோது வேதனையாகிவிட்டது.இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பெண்குலமே…என்ற ரீதியில் பெண்கள் மற்றவர்களுக்கு தவறாகவும்,தனக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலும் தன் போக்கில் போய்க்கொண்டு இருக்கிறார்கள்.

சினிமாத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்ட அந்தப்பெண் யாரைப்பிடித்தால் நாம் உடனடியாக முன்னேறலாம் என்று சமீபகாலமாக சினிமாத்துறை சார்ந்த நண்பர்களிடம் நல்ல பழக்கம் வைத்துக்கொண்டு,தன் விருப்பத்தை அடிக்கடி வெளிப்படுத்திக் கொண்டே  இருந்தாள்.

யாரும் செட் ஆகவில்லை.எல்லாம் பழகிவிட்டு சிபாரிசு என்று வந்தவுடன் இடத்தை காலிபண்ணிக்கொண்டு போய்விட்டனர்.ஏமாற்றம் அடைந்த அப்பெண் தனக்கு சினிமாத்துறை சார்ந்து என்ன என்ன விசயங்கள் தெரியுமோ அதில் மூக்கை நுழைத்து,அதன்மூலம் பல பிரபல நண்பர்களின் அறிமுகத்தை பிடிக்க ஆரம்பித்தாள்.

அப்போது தான் அந்த நபரை சந்தித்தாள் அப்பெண். நல்ல அழகு,பதவி,பணம் எல்லாம் நிறைந்த அவரைப் பார்க்கும்போது தனக்குள் கணக்குப்போட ஆரம்பித்தாள்.

இவரை எப்படியாவது பிடித்து வளைத்துப்போட வேண்டும்.இவர் மூலம் பல புரடியூஸர்ஸ் மற்றும் டைரக்டர்ஸ் இவர்களை மீட் பண்ணலாம் என்ற நம்பிக்கையில் அந்த நபருடன் நன்கு பழக ஆரம்பித்தாள்.

ஜொள்ளுப்பார்ட்டியான அந்த நபரும் இப்பெண்ணுடன் பழக ஆரம்பித்தார்.பழக்கம் வேகமாக வளர்ந்து நாளடைவில் காதலாகவும் மாறிவிட்டது.

நீ இல்லையெனில் நான் இல்லை..என்ற ரீதியில் ஒருவருக்கொருவர் இணை பிரியாமல் வாழ்ந்தனர்.அந்த சமயத்தில் தான் அப்பெண்ணுக்குத் தெரிந்தது, தன் நண்பருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது.

முதலில் கோபப்பட்ட அப்பெண் நாளடைவில் சரி போகட்டும் அவளை மனைவியாக வைத்துக்கொள்…என்னை மனைவியாகவும்,காதலியாகவும் வைத்துக்கொள் என்றபடி சமாதானம் ஆனாள்.  கல்யாணம் ஆகாத இப்பெண், ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளைகள் இருக்கும் ஒரு தகப்பனுக்குத் தன் வாழ்க்கையை ஏன் பரிசாக தரவேண்டும் என்ற கேள்வி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தியது.

அப்போது தான் தன் தோழி ஒருவள் அப்பெண்ணுக்கு அட்வைஸ் பண்ணினாள். ஏண்டி இப்ப உனக்கு என்ன குறை ஏன் இரண்டாம் தாரமாக போய் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிற..?அவ்வளவு காதலா அவர் மேல்…?என்றவளை..

சிரிப்புடன் நோக்கினாள் அப்பெண்.  நீ வேற போடி காதலாவது கத்திரிக்கையாவது…அந்த ஆளுக்கு நிறைய சினிமாத்துறை சார்ந்த ஆட்களைத்தெரியும்,அதன்மூலம் நான் சினிமா சான்ஸ் தேடிக்கலாம் என்று தான் அவரோடு சுத்திட்டு இருக்கேன்.ஒரு பெரிய சான்ஸ் கிடைக்கட்டும் இந்த ஆளதூக்கி ஓரம் கட்டிட்டு போய்ட்டே இருப்பேன்.என்றாள்.

அதிர்ச்சியானாள் தோழி என்னடி இது முன்னேற்றத்திற்கு விலை உன் வாழ்க்கையா…?என்னடி சொல்றா..அப்போ அவர்மேல் காதல் கொண்டது போல் நடந்துகொள்வது எல்லாம்……

நடிப்பு தாண்டி நாம முன்னேறனும் என்றால் அதுக்கு இணையாக என் ‘கற்பு’ மட்டுமல்ல என் வாழ்க்கையே வைத்து பணயம் ஆடித்தான் ஜெயிக்கப்போறேன்..என்றாள் வெறியோடு…….

இச்சம்பவம் சினிமாத்துறை சார்ந்த இந்தப்பெண்ணுக்கு மட்டுமல்ல,காலேஜ் படிக்கும் பெண் முதல்கொண்டு…அரசியலில் கால்பதிக்க ஆசைபடும் பெண் முதல்கொண்டு எல்லோரும் இன்று இப்படி தான் நினைக்கிறார்கள். பெண்ணின் உடல் அவனுக்குத்தேவைப்படுது, எனக்கு அவன் பணம்,செல்வாக்கு தேவைப்படுது கிவ் அண்ட் டேக் பாலிஸி இதுல என்ன இருக்கு…? எனக்குத்தேவை முன்னேற்றம், பாப்புலாரிட்டி, பணம் இதுமட்டும் தான் என்கிறார்கள் இவ்வகைப் பெண்கள்.

பார்த்தீங்களா இன்றைய டிரண்ட் இதுதான் இப்படித்தான் சில பெண்கள் சில ஆண்களை பயன்படுத்தி வெற்றிகொள்கின்றனர்…


அடுத்து இன்னொரு  டிரண்ட்…..

Sunday 6 October 2013

சுவேதா......!(என்னுள் ஆணின் அகிம்சை...பெண்ணின் இம்சை..) 1

போர்த்திக்கொண்டு தூங்கிற பழக்கம் என்னுள் எப்போது புகுந்தது என்று தெரியவில்லை.நிறைய நேரங்களில் அதைத்தான் கடைப்பிடிக்கிறேன்.இது சரியா,தவறா என்று தெரியவில்லை.ஆனால் இது எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு.தூக்கம் வரவில்லையெனினும் போர்வை இழுத்து பிடித்து படுத்துக்கொள்வதில் இருக்கும் சுகமே தனிதான்..

ஒரு போர்வை போர்த்திக்கொண்டு தூங்குவதிலேயே இத்தனை சுகம் காணும் நம் மனது..இரு போர்வையை ஒன்றாக சுருட்டி,தன் மீது போர்த்திக்கொண்டு, தன் மனபாரத்தை எக் காலத்திலும் வெளியில் தெரியாதபடி உடல் முழுதையும்,உடலுக்குள் இருக்கும் தன் மனதையும் வெளிக்காட்டாமல் போர்வைக்குள் போர்த்துக்கொண்டு,குளிரிலும்..வியர்த்து  வாழப்பழகிப்போன நான்…

ஒரு ஆணின் உள்ளத்தில் இரத்த சிவப்பாய் வழியும் பெண்ணின் அரிதாரத்தை பூசிக்கொண்டவன்(ள்).நீண்ட நெடிய போராட்டத்துக்குப் பின் ஜெயிக்கப்போகும் போரினைப்போல..,என் எண்ணங்களுக்கும்,உடலுக்கும் இடையே நடந்த உரிமைப்போராட்டம் பற்றி என்னை நானே திரும்பிப்பார்க்கும் பார்வையாகவும்..என்னிலிருந்து நீங்கள் என்னைப்பற்றி என்ன அறிந்துகொள்ள வேண்டும் என்ற நல்ல நோக்கிலும் தான் என் ”சுய”நிலையை சொல்ல முன் வந்து இருக்கிறேன்.

எனக்குத்தெரிந்த,என் வாழ்க்கையில் நடந்த,என்னை நானாக்கிய,நாட்களை எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி தான் சுவேதா என்ற என்னை,இதுவரை யாருக்கும் சொல்லாத விசயங்களை,ரகசியங்களை உங்களிடன் பகிர்ந்துகொள்ள வந்து இருக்கிறேன்.என்னை உங்கள் வீட்டில் ஒருவனாக,ஒருத்தியாக பாருங்கள்.அப்போது தான் ஒலி,ஒளி அல்லாமல்,நான் கூறுவதும் ஒரு கதை போல் அமையாமல் உங்களுள் நடமாடிக்கொண்டு இருக்கும் ஒரு கேரக்டராக உருமாறுவேன்.

என் வாழ்க்கையை நான் சொல்லி என்ன பயன்…?அல்லது நீங்கள் கேட்டு தான் என்ன பயன்…? .அதனால் பிறருக்கு என்ன லாபம் என்ற கேள்வி எழலாம்…?

என்னில் இருக்கும் தாபத்தீ பற்றி எரியும் வேளையில் நான் என் உணர்வுகளை கட்டுப்படுத்தி,என் உற்சாக எண்ணங்களை எனக்கும் என்னைச்சுற்றி இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாக என் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து அதில் வெற்றியும் கண்டு வென்று கொண்டு இருக்கிறேன்.

என்னைப்பற்றி முழுதாக அறிய வேண்டும்,என் ஆணுக்குள் இருக்கும் பெண் தன்மையை பெரிதாக காட்ட வேண்டும்.என் மனப்போராட்டங்களை பகிர்ந்துகொண்டு என் தவிக்கும் வாய்க்கு….சிறிது தண்ணீர் ஊற்றிக் கொள்ள நினைக்கிறேன்.நான் வாழப்பிறந்தவள்(ன்) மட்டுமல்ல வாழ வைக்க பிறந்தவள் என்பதை உலகிற்குக் காட்டும் முயற்சி தான் இந்த வாழ்க்கைப் பயணம் .

என் பயணத்தோடு நீங்களும் பயணிக்க வைக்கத்தேவையான முயற்சிகளை என் வார்த்தைகளில் கொண்டு வர,அந்த வார்த்தையை நீங்கள் புரிந்துகொள்ளும் வகையில் படைக்க வேண்டும் என்ற அக்கறையுடன் இந்த உண்மை சம்பவ என் வாழ்க்கை நாவலை நீங்கள் காண உங்களோடு பயணிப்பதில் நானும் ஆவலாக……….

தொடர்வோம்….அந்த நீண்ட பயணத்தை……..

நான் என் அம்மாவின் வயிற்றுக்குள் உந்து சக்தியாக யாரோல தள்ளப்பட்டேன்..நீந்தி…நீந்தி பயணம் மேற்க்கொண்டு கடைசியில் ஒரு இருட்டறைக்குள் புகுத்தப்பட்டேன்.அங்கே நான் மிகவும் பயந்தேன்.
எனக்கு தைரியம் சொல்வதற்குக்கூட ஒரு ஆள் இல்லை.தனிமை என்னை வாட்டியது.அப்போது ஆதரவாக ஒரு உருண்டை என்னை தனக்குள் அடக்கிக்கொண்டது.

அந்த உருண்டையின் அணைப்பிலேயே நானும் வளர்ச்சியடையத்தொடங்கினேன்.கொஞ்சம்..கொஞ்சமாக என் இதயத்துடிப்பை நானே அறிய நேர்ந்தது.எனக்கு மிகவும் சந்தோஷம்.என்னுடைய மூச்சுக்காற்றும்,இதயத்துடிப்பும் எனக்கு அருகில் நான் அறியும் வகையிலேயே கேட்பதில் ரொம்ப பேரார்வம் கொண்டேன்.
அடுத்ததாக என் கைகள்,என் கால்கள்,என் உடல்பாகங்கள் எல்லாம் வளர்ந்தது.


ஐந்தாம் மாதம் ஆரம்பிக்கும் சமயம் என் உடலுறுப்பு வளரத்தொடங்கியது.அது மேல் பகுதி நீளமாகவும்,கீழே இரண்டு உருண்டைகளுடன் வளர ஆரம்பித்தது.

வளரும் சுவேதா.....

.....

Friday 4 October 2013

பிள்ளைங்க வளர்ந்தா பெற்றோர்களின் செக்ஸ் ஆர்வம் குறையனுமா....?

வீட்டுல இரண்டு பிள்ளைங்க இருக்காங்க..அவங்க படிப்பு மற்றும் உடல்நிலை குறித்து தான் இப்போதெல்லாம் அக்கறையாக இருக்கிறது.எனது சிந்தனையும் அதை நோக்கி தான் செல்கிறது.வேற எந்த எண்ணத்திலும் என் மனம் செல்ல மறுக்கிறது.

இரவு படுக்கை விசயத்தில் கூட என் கணவருக்கு ஈடு கொடுக்கமுடியல..எங்கே என் பையனுங்க இரண்டுபேரும் முழுச்சு வந்துடுவாங்களோ பார்த்துடுவாங்களோ என்ற எண்ணத்தில் மூடு கூட சரியாக வருவதில்லை.ஆரம்பத்தில் சகஜமாக எடுத்துக்கொண்டார் என் கணவர்.

ஆனால்,மனதிற்குள் இந்த விசயங்களை வைத்துக்கொண்டு,என்னுடன் சரியாக பேசுவது கூட இல்லை.இரவு லேட்டாக வருவதும்,கோபத்தில் கத்துவதும் என்று ரொம்ப மோசமாக செயல்படுகிறார்.

படுக்கை என்ன அவ்வளவு பெரிய விசயமா..?ஏன் எனக்கு ஏற்படும் பிள்ளை பாசம் என் கணவருக்கு வரமாட்டேங்குது.எப்போ பார்த்தாலும் இதே வேலையாக திரிய முடியுமா..?ஒரு வயதிற்கு மேல் இதெல்லாம் அவசியம் அல்ல.முன்னேற்றம்,பிள்ளைகள் எதிர்காலம் தான் நம் எண்ணத்தில் வரவேண்டும்.என்று நான் சொல்ல ஆரம்பித்தால்,கோபத்தில் அடிக்கக்கூட வந்துவிடுகிறார்..

சரி,நாமும் விட்டுக்கொடுத்து போகவேண்டும் என்பதாலும்..அவரின் கோபத்தைக் கருதியும் என் மனதை மாற்றிப்பார்க்கிறேன்.ஆனால் முடியவில்லை. இரவு படுக்கையில் ஈடுபாடாக இருப்பது போல் நடித்தால் கூட கண்டுபிடித்துவிடுகிறார்.
சே என்ன ஜென்மமோ….எருமை மாடு மாதிரி இருக்க” என்று கூறிவிட்டு இடையில் எழுந்து போய்விடுகிறார்.கோபத்தில் பிள்ளைகள் முன்னால் கூட நீ எதுக்கும் லாயக்கில்லை என்று திட்ட ஆரம்பித்துவிட்டார்.
நான் என்னடி பண்றது,என்று என் தோழி தன் ஆதங்கத்தை எல்லாம் என்னிடம் கொட்டி தீர்த்துவிட்டு,அழ ஆரம்பித்தாள்.பின்னர் என்னை நோக்கியவள் நான் சிரித்துக்கொண்டு இருந்ததை பார்த்து கடுப்பாகிவிட்டாள்.

ஏண்டி நான் இவ்வளவு கஷ்டத்தை சொல்லிட்டு இருக்கேன்.”நீ சிரிக்கிறையா…போடி நான் போறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினாள்.
நான் அவளை அமர்த்தி அவளது கையைப் பிடித்து “அடி லூஸூ உன்னைப் போல் ஒரு வளர்ந்த குழந்தையை பார்த்து,சிரிக்கத்தான் தோனுது.தப்பு உன் பேர்ல தான்.உன் கணவரின் மேல் இல்ல.”என்றதும் மேலும் என்னை கோபமாக பார்த்தாள்.

முதலில் நான் சொல்வதைக்கேள்.”உனக்கு உன் பிள்ளைகள் எவ்வளவு முக்கியமோ..அதே அளவு தான் உன் கணவருக்கும் முக்கியம்.உங்களுக்கு மட்டுமல்ல எல்லோர் வீட்டிலும் குழந்தைங்க வளர வளர அவர்கள் மேல் கூடுதல் அன்பும் அரவணைப்பும் வரத்தான் செய்யும்.

ஆனால்,அதற்கும் கணவருடன் உறவில் ஈடுபடுவதற்கும் என்னடி சம்பந்தம் இருக்கு.?நீயா போட்டு மனதை குழப்பிக்கிறனு நினைக்கிறேன்.
உன் வீட்டில் இரண்டு படுக்கை அறை இருக்கு தானே? என்றேன்.
ஆமாம் என்றாள்.

நீ எங்க படுப்ப..?

நான் என் பையனுங்க கூடத்தான் இரவில் படுப்பேன்.இவர் கூப்பிட்டால் மட்டும் அவர் இருக்கும் ரூமுக்குச் செல்வேன்.கதவை தாழ்ப்பாள் போட்டாலும் கூட எனக்கு என் பையன்கள் கூப்பிடுவது போலவே தோன்றும்.என்றவளை.........

தடுத்து நிறுத்தினேன்.

இனிமே ஒழுங்கா உன் கணவரின் அருகில் படு,பசங்க இருவரையும் தனியறையில் படுக்க வை.இரவில் முழிப்பு வந்தால் மட்டும் சென்று நல்லா தூங்குறாங்களா என்று பார்.மற்றபடி பதினைந்து வயதை நெருங்கிய உன் பையன்கள் ப்ரைவஸி தேடுவாங்க..நீ அவர்கள் அருகில் படுத்து இருந்தால் அவன்களே உன்னை டிஸ்டர்பாக நினைக்க வாய்ப்புள்ளது.

போடி அப்படியெல்லாம் இல்ல.என் பையன்கள் இருவரும் என் மேல் கால் போட்டு தூங்கியே பழக்கப்படுத்திட்டானுங்க.என்னைய டிஸ்டர்பாக எல்லாம் நினைக்கமாட்டாங்க..


அட இவளை என்ன சொல்லி தெளிவாக்குவது என்று யோசித்துக்கொண்டு இருந்தேன்…..தொடரும்.

Thursday 3 October 2013

காசு பணம் துட்டு மணி மணி.....!

புரட்டாசி மாதம் வந்தாலே போதும் காய்கறி,பழ வகைகள் விலை ஏறிடும் அபாயம் வந்துடும்..அப்படியென்னா புரட்டாசி மாதம் காஸ்ட்லி மாதமா என்று நினைக்காதீங்க…புரட்டாசி மாதம் அசைவ உணவுகளை தவிர்த்து விரதம் என்ற பெயரில் சைவ  வகைகளை தான் நிறைய பேர் சாப்பிடுவார்கள்.

அந்தமாதம் முழுதும் பெருமாள் சாமிக்கு விரதம் இருந்து வாரவாரம் வீட்டில் தழிகை போட்டு எல்லா வகையான காய்கறிகள் செய்து வைத்து,வடை பாயசம் போன்ற உணவு வகைகளை பரிமாறி,தழை வாலை இலையில் அனைத்தையும் பரப்பி சாமிக்கு முன்னால் படைத்துவிட்டு,பூஜை போட்டு பின்னர் காக்காவுக்கு சோறு வைத்து விட்டு தான் வீட்டில் உள்ளவர்கள் உணவு சாப்பிடுவார்கள்.

சாமி சாப்பிட்டுச்சா ? என்றால் இல்லை …எப்படி சாமி சாப்பிடும்?சிலை,போட்டோ இவற்றிலிருந்து கையை வெளியே விட்டு சாப்பாட்டை எடுத்து எப்படி உண்ணமுடியும்..?அதனால் .சாமிக்கு சமையல் வகையின் வாடையை மட்டுமே காண்பித்துவிட்டு,பின்னர் வெரைட்டியான உணவுகளை நாம் ஒரு பிடி பிடித்துவிடலாம்.இது தான் புரட்டாதி மாதத்தின் உன்னதம்.

சரி சாப்பாடெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும்…நாம் ஏன் புரட்டாசி மாதத்தை தேர்ந்தெடுத்து,அந்தமாதம் பெருமாளுக்கு விரதம் இருக்க வேண்டும் என்று யாருக்காவது விளக்கம் தெரியுமா..?இதோ இப்போ தெரிஞ்சுக்கோங்க..

வாரந்தோறும் விரத நாட்கள் இருந்தாலும் ஒரு மாதம் முழுவதும் விரதம் கடைபிடிக்கப்படுவது புரட்டாசி மாதத்தில் தான். பொதுவாக சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த நாள் என்றாலும், புரட்டாசியில் வரும் சனிக்கிழமைகளுக்கு தனி மகத்துவம் உண்டு. இந்த நாளில் மேற்கொள்ளப்படும் விரதம் பல தடைகளை நீக்கி நலன்களை வாரி வழங்குமாம்…(மாதம்மும்மாரி பொழிவது போல் இருக்குமோ...?)

ஒவ்வொரு தெய்வத்துக்கும் தேவர்களுக்கும் சில மாதங்களில் வரும் பண்டிகைகள் முக்கியமானதாக இருக்கும். பெருமாள் மாதம் என்றழைக்கப்படும் புரட்டாசி மாதம் விஷ்ணுவுக்குரிய பூஜைகளையும், விரதங்களையும், வழிபாடுகளையும் செய்ய உகந்ததாகும். பெருமாள் கோயில்கள் மற்றும் 108 திவ்ய தேசங்களில் புரட்டாசி மாத வழிபாடு மிகவும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசியில் திருப்பதி போன்ற முக்கிய ஸ்தலங்களில் பிரம்மோற்சவம் நடக்கும். குலதெய்வ பூஜைகளை செய்யவும், காணிக்கை, நேர்த்தி கடன்கள் செலுத்தவும் இந்த மாதம் சிறந்தது.

மாதம் முழுவதும் பக்தர்கள் அசைவ உணவுகளை நிறுத்திவிட்டு விரதம் இருப்பார்கள். சனிக்கிழமைகளில் வீட்டில் உள்ளவர்கள் திருநாமம் அணிந்து சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், சுண்டல், வடை பாயாசம், நைவேத்யமாக படைத்து பெருமாளை வழிபடுவர்.
பலர் கையில் உண்டியல் ஏந்தி நாராயணா... கோபாலா... கோவிந்தா... என்று திருநாமங்களை உரக்க கூறியபடி வீடு வீடாக சென்று பணம், அரிசி, தானம் பெறுவர். பணத்தை திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்துவர். தானமாக பெற்ற அரிசியை கொண்டு பொங்கல் செய்து படைத்து அனைவருக்கும் வழங்குவர். (அப்போது தான் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் ஆகுமாம்,கடன் பட்டவர்கள் கடன் அடைப்பார்களாம்,குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்குமாம்.)

பெருமாள் சாமி குழந்தை பாக்கியம் கொடுப்பார் எனில்,இங்கிருக்கும் ஆண்கள் எல்லாம் எதற்கு..?குழந்தை வேண்டி பெருமாள் கோவிலுக்குச் சென்றாலே போதுமே…?ஒகோ…… இன்ஷியல் பிரச்னை வந்துடுமோ..? எல்லோருக்கும் ஒரே மாதிரி இன்ஷியல் ஆய்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு அப்பாவை அமைத்துக்கொடுத்து இருக்கிறார் பெருமாள்.(எவ்வளவு நல்ல எண்ணம் பாருங்க சாமிக்கு)

பல இடங்களில் உறியடி திருவிழாவும், பெருமாளுக்கு திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். அனைத்து விஷ்ணு ஸ்தலங்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்து கொண்டே இருக்கும்.குடும்பத்தினருடன் பெருமாள் ஸ்தலங்களுக்கு பாத யாத்திரையாக சென்று தரிசனம் செய்து நேர்த்திக்கடன், காணிக்கை செலுத்துபவர்களும் உண்டு.

இந்த மாதத்தில் வளர்பிறையில் வரும் 10 நாட்கள் மிகவும் விசேஷம். அதைத் தான் நவராத்திரி என்றும் தசரா என்றும் கொண்டாடி மகிழ்கிறோம். புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் பிரவேசிக்கிறார். கன்னி ராசி என்பது புதனின் வீடாகும். இங்கு புதன் உச்சபலம் பெறுகிறார். புதன் கிரகம் விஷ்ணுவின் அம்சமாகும். ஆகையால்தான் புரட்டாசி மாதம் பிறந்தவுடன் பெருமாளுக்குரிய விழாக்கள், பிரம்மோற்சவங்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. பெருமாளுக்கு புதன், சனி இரண்டும் விசேஷ தினங்களாகும்.

இப்போ தெரிந்ததாங்க ஏன் புரட்டாதி மாதம் இவ்வளவு காஸ்ட்லி மாதம் என்று..,இப்படியெல்லாம் ஒரு தெய்வத்தின் மேல் பயமும்,பக்தியும் வரவைத்து,உனக்கு நன்மை கிடைக்கும் முயற்சித்துப்பார் என்று முன்னோர்கள் கூறி வைத்துள்ளார்கள்.அதையே காலங்காலமாக நாமும் என்ன காரணம் என்றே கேட்காமல் இந்த விரத நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருகிறோம்.

ஆனால் உண்மையான காரணம் புரட்டாசி மாதம் மழைக்காலம் என்பதால் சூடான உணவு வகைகளை சாப்பிடும் வழக்கம் மேற்கொண்டு இருப்பார்கள்.குளிர்காலத்தில் அசைவ உணவுகள் செரிமானம் ஆவதில் பிரச்னை உண்டாகும் என்பதால் அந்த மாதத்தில் அசைவ வகைகளை தவிர்த்து இருக்கலாம்.
இந்த மாதங்களில் காய்கறிகள் விளைநிலங்களில் அதிக விளைச்சல் இருக்கும்.அதனால் தான் புரட்டாதி மாதத்தில் காய்கறி மட்டும் சாப்பிட்டு அசைவ உணவிற்கு ஒரு மாதம் விடை கொடுத்து செரிமானப் பிரச்னை வராமல் வயிற்றை காப்பாற்றி இருப்பார்கள்.

ஆனால் மழைக்காலங்களில் மாலை நேரம் இருட்டிவிடும்,அதனால் வீட்டில் இருந்து சூடாக செய்து சாப்பிட ஏற்படுத்தப்பட்டது தான் விநாயகர் சதுர்த்தி ஆயுத பூஜை போன்ற விழாக்கள். சுண்டல் கொழுக்கட்டை,அவல்,பொறி போன்ற உணவுகளை செய்து சாப்பிட்டு இருப்பார்கள் என்பது தான் உண்மையான காரணமாக இருக்கும்.ஆனால் பின்னர் வந்த சந்ததியினர் விழா,சாமி,பயம் என்ற ரீதியில் மக்களை முட்டாளாக்கி,இதையெல்லாம் கடைபிடிக்க வேண்டும் என்று ஏமாற்றி நம்ப வைத்து இருக்கிறார்கள்.

அசைவ உணவுக்கு தடை போட வேண்டும் என்று நினைத்தால் அது எந்தமாதமாக இருந்தாலும் தடை போட்டுக்கொள்ள வேண்டியது தான்.அதற்காக ஸ்பெஷல் மாதமாக புரட்டாசியை பயன்படுத்திக்கொண்டதும்,அதையே நம்பி நம் மக்களும் இந்த கொள்கைகளை கடைப்பிடிப்பதும் தான் பெருமாளுக்கே சிரிப்பு வரக்கூடிய விசயமாகும்.


மக்கள் விரதம் கடைப்பிடித்து கோவிலுக்கு வந்து வழிபடுதல் அல்ல…கோவிலில் செலுத்தப்படும் காணிக்கை மட்டும் தான் பெருமாளுக்குத்தேவை.ஏனெனில் குபேரன் கடனை அடைக்க பணம் மட்டுமே உதவும்,பணத்தைக்கொடுத்து தன் மனைவியை மீட்டெடுக்க பாடுபடும் பெருமாளை ஏமாற்றாதீங்க..ப்ளீஸ் எல்லோரும் கோவிலுக்குச் சென்று காணிக்கை செலுத்துங்க…!